தொடர்பவர்கள்

Sunday, 12 May 2013

சிந்திக்க ஒரு நிமிடம்!


ஆற்றலை உருவாக்கவோ, அழிக்கவோ முடியாது. ஆனால் ஒரு வகையிலிருந்து, 

மற்றொரு வகைக்கு சிறிது இழப்புடன் மாற்ற முடியும்!!





எட்டாம் வகுப்பில் அறிவியல் ஆசிரியர் உருப்போட செய்தது, அப்போது

 மண்டையில் சரியாக ஏறவில்லை என்றாலும், இப்போது புரிந்தாக வேண்டும்.

நம் விஷயத்துக்கு வருவோம். இப்போது எந்த தமிழ் செய்தி சேனல்களை 

எடுத்துக்கொண்டாலும் கூடங்குளம் அணுமின் நிலையம் பற்றிய விவாதம்தான். 

அணுசக்தி தேவையா, வேண்டாமா என்ற விவாதத்தை தொலைகாட்சியில் பேசும் 

பண்டிதர்களிடையே விட்டு விடுகிறேன். அடியேனுக்கு அவர்கள் அளவுக்கு அறிவு 

இல்லை.



ஆப்பிரிக்கக் காடுகளில் வேட்டைக்காரர்களாகவும், உணவு சேகரித்தும் வாழ்ந்து 

கொண்டிருந்த ஆதிமனிதன்,  பரிணாம வளர்ச்சியில், கருவிகள் உருவாக்கவும், 

பயிரிடவும், கற்றுக்கொண்டான். கூடவே வடக்கு ஐரோப்பா, ஆசியா, மற்றும் 

வடஅமெரிக்க பகுதிகளுக்கும் புலம் பெயர்ந்தான். அது சுமார் 70000-130000 

ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. அந்த பகுதிகளில் கடும்குளிர் வாட்டியெடுத்த காலம். 

மற்ற விலங்கினங்களை போல மனிதனுக்கு குளிரை தாங்கும் இயற்கைக் கவசம் 

எதுவும் இல்லை. தீயின் பயன்பாட்டை முன்னரே அறிந்திருந்தாலும், அப்போது தான் 

முழுமையாக உபயோகிக்கத் தொடங்கினான். அதுவரை, மரங்களை மட்டுமே 

பயன்படுத்தி வந்தவன், அந்த பகுதிகளில் அதிகமாக கிடைத்த, பீட்(peat) என்ற ஒரு

 வகையான நிலக்கரியை கண்டுபிடித்து உபயோகிக்க தொடங்கினான்.



நாகரிகம் வளர ஆரம்பித்த பிறகு, உணவு, உடை, இருப்பிடம் என்ற அடிப்படை 

தேவைகள் தாண்டி மற்ற தேவைகளும் தோன்றின. முக்கியமாக பொழுதுபோக்கு,

 கலை, அறிவியல் துறைகள் முன்னேற ஆரம்பித்தன. அத்துடன் மனிதனின் 

எரிசக்தி தேவைகளும் வளர ஆரம்பித்தது. காடுகள் அழிய ஆரம்பித்தன. 

சுற்றுச்சூழல் மாசுபட ஆரம்பித்தது. கடந்த முந்நூறு ஆண்டுகளில் தான் 

பெரும்பாலான கண்டுபிடிப்புகளும், முன்னேற்றங்களும் நடந்தேறியது. இந்த 

முன்னேற்றங்களுக்கு முக்கிய காரணமாக, நிலக்கரி உபயோகத்தை சொல்லலாம். 

உச்சகட்டமாக எரி எண்ணையின் பயனை கண்டுபிடித்தது. காலை எழுந்தவுடன் 

குடிக்கும் காபி கப் தொடங்கி, இதனை எழுதும் மடிக்கணினி, அமர்ந்திருக்கும் சேர்,

 இரவு தூங்கும் படுக்கை வரை எல்லாமே பெட்ரோலியத்திலிருந்து உருவாக்கிய 

பொருள்களே.



எண்ணெய்வளமிக்க நிலத்திற்கான சண்டைகளும், ஆக்கிரமிப்புகளும் இருபதாம்

 நூற்றாண்டின் தொடக்கத்திலேயே ஆரம்பித்துவிட்டன. எண்ணெய் வளம் எப்படியும்

 ஒரு நாள் தீர்ந்துவிடும் என்று தெரியும். எந்த ஒரு சூழ்நிலைக்கும் மாற்று திட்டம்

 வைத்திருப்பான் மனிதன். அது போலவே, அணுப்பிளவு சோதனைகளும், அணு

 குண்டு வெடிப்புகளும். அணுசக்தியின் திறனை உலகிற்கு பறைசாற்றின.



பொதுத்துறைக்கு  என்று ரஷ்யாவில் 1954 ஆம் ஆண்டு முதல் அணுஉலை 

தொடங்கிய பின்பு, அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்சு, ஜெர்மனி, சுவீடன்,

 சீனா, ஜப்பான், போன்ற வளர்ந்த நாடுகளோடு, இந்தியா, பாகிஸ்தான் போன்ற 

வளரும் நாடுகளுடன் 2013, ஜனவரி 16 ஆம் தேதிப்படி உலகில் மொத்தமாக

 முப்பத்தியொரு நாடுகளில் 437 அணுஉலைகள் இயங்கி வருகின்றன.



பொதுவாக அணுசக்தி ஆதரவாளர்கள் சொல்வது, நிலக்கரி எரித்து மின்சாரம் 

தயாரிக்கும் போது உருவாகும் கார்பன் டைஆக்சைடு உருவாவது இல்லை. 

சுற்றுச்சூழல் மாசடைவது குறைவு, ஆரம்ப பண முதலீட்டை தவிர வேறு எதுவும் 

தேவை இல்லை என்பது.  உண்மைதான் ஆனாலும் சில உண்மைகளை மறைத்து 

விடுகிறார்கள் அல்லது மறந்து விடுகிறார்கள்.



முதலாவது, அணுமின் நிலையங்களின் ஆயுள் காலம். பெரும்பாலானவை, முப்பது 

ஆண்டுகள் வரை மட்டுமே செயல்படும். பின்னர் அவைகளை இழுத்து 

மூடவேண்டியது தான். ஒரு சாதாரண தொழிற்ச்சாலைக்கு மூடு விழா நடத்துவதை 

போல செய்ய முடியாது. உலையின் உள்ளே உபயோகப்படுத்திய அனைத்து 

பொருட்களிலும் இருக்கும் கதிர்வீச்சு மக்களுக்கு பாதிக்காத அளவுக்கு குறைக்க 

வேண்டும். நிறைய முறை இதற்கு சாத்தியம் குறைவுதான். அப்படி குறைக்க 

முடியாமல் போனவைகளையும் அணுக்கழிவாக வகைப்படுத்தி விடுவார்கள்.



இரண்டாவது, அணுக்கழிவு மேலாண்மை. அணுப்பிளவால் அணுஉலையில் 

உருவாகும் தனிமங்களும் (fission products) கதிரியக்கம் கொண்டவையே. இவைகளின்

 கதிரியக்க அளவு பாதி அளவுக்கு குறையவே பல லட்ச ஆண்டுகள் ஆகும். 

அவைகளை ஆழமாக பாறைகளில், நிலத்திலோ, கடலிலோ புதைப்பது மட்டுமே 

தற்போது செய்ய முடிவது. அவ்வாறு புதைக்கப்பட்ட கழிவுகளின் ஆயுட்காலம் 

முழுவதும் மனிதற்கோ, பிற உயிரினங்களுக்கோ ஆபத்து ஏற்படாதவாறு பாதுகாப்பது,

 நடைமுறையில் சாத்தியம் இல்லாத ஒன்று.



மூன்றாவது, விபத்து ஏற்படும் சாத்தியக்கூறு. நாங்கள் கட்டிய அணுஉலை மிகவும் 

பாதுகாப்பானது, விபத்துக்கள் நடக்க அறவே வாய்ப்புகள் இல்லை என்று யாரும் 

சொல்ல முடியாது. காரணம் அவைகளின் பல்லடுக்கு வடிவமைப்பு முறைகள்.  ஒரு 

பகுதியில் பிரச்னை ஏற்பட்டாலும், அதன் தாக்கம் மற்றொரு பகுதியிலும் வர

 வாய்ப்பிருக்கிறது. ஒன்றுக்கு ஒன்று சார்ந்திருப்பதால் டொமினோ எபெக்டில் 

மொத்த உலையுமே பாதிக்கலாம்!! எல்லோரும் பயமுறுத்துவதைப் போல 

அணுகுண்டு போல வெடிக்காது, மாறாக முழுவதும் உருகி, நிலத்திலும், காற்றிலும்,

 நீரிழும், கதிரியக்கத் தனிமங்களை வெளியிடும் வாய்ப்பிருக்கிறது. இது போன்ற 

விபத்துதான் அமெரிக்காவின் த்ரீ ஐலண்டு, சோவித்தின் செர்னோபில், ஜப்பானின்

 புகொஷிமா, ஆகிய இடங்களில் நடந்துள்ளது. இது கண்டிப்பாக நடக்கும் என்று 

நான் கூறவில்லை, நடக்க வாய்ப்பிருக்கின்றது என்று தான் சொல்கிறேன். 






இருந்தாலும் நிலக்கரியிலிருந்து பெறப்படும் மின்சக்தியினால் உண்டாகும் 

ஒட்டுமொத்த மாசை விட அணுசக்தியினால் ஒன்றாகும் மாசு குறைவுதான். ஏன்

 நிலக்கரியினால் நமக்கு காற்று மாசுபடுவது மட்டுமே தெரியும். எத்தனை பேருக்கு 

நிலக்கரி எரிப்பதன் மூலம் காற்றில் கதிரியக்கப் பொருள்கள் கலக்கின்றது என்று 

தெரியும்???எந்த மரபு சார்ந்த முறையினாலும் ஏதோ ஒரு வகையில் சுற்றுச்சூழலை 

மாசுபடுத்துகிறோம்.அணுக்கழிவு மேலாண்மைக்கு ஆகும் செலவை கணக்கில்

 எடுக்கவில்லை என்றால், மிச்ச செலவு குறைவு தான். எந்த துர்ச்சம்பவங்களும் 

நிகழாதிருக்கும் வரையில், சுற்றுச்சூழல் மாசுபடுவதும் ரொம்ப குறைவே!!! 

இதனால்தான் அரசாங்கம், அணுஉலைகளை கட்ட முற்படுகிறது. ஆயினும்

 ஒட்டுமொத்த ரிஸ்க் அதிகம்தான்.


இதற்கெல்லாம் மாற்று என்ன??


இந்தியா போன்ற வெப்ப பிரதேசத்தில் ஆண்டு முழுவதும் கிடைக்கும் சூரிய 

சக்தியை பயன்படுத்துவதை அதிகரிக்கலாம், காற்றலைகளின் எண்ணிக்கையை 

அதிகப்படுத்தலாம், கடலலைகளின் மூலம் மின்சாரம் தயாரிப்பதை 

செயல்படுத்தலாம், பெட்ரோல், டீசல், ஆகியவற்றுடன் எத்தனால் கலந்து 

உபயோகிக்கலாம். எப்படியும் இன்னும் 100 அல்லது 150 ஆண்டுகளுக்கு மேல் கச்சா 

எண்ணெய் கிடைக்காது என்று தெரிந்த பிறகும் மாற்று ஏற்பாடுகளுக்கு, நம்மவர்கள்

 ஒரு முயற்சியும் எடுத்த மாதிரியே தெரியவில்லை. சூரியசக்தியை உபயோகிக்கும் 

முறைக்கு அரசின் மானியமோ, கடன் உதவியோ இருப்பதாக தெரியவில்லை. 

முதல்முறை  வைக்க மட்டும் தான் செலவாகும். வைத்தபின் வேறு எந்த செலவும்

இருக்காது.

சூரியசக்தியை உபயொகிப்பவர்க்கு, சரியான மானியங்கள் வழங்கி ஊக்கப்படுத்த 

வேண்டும். புதிதாக கட்டப்படும் கட்டிடங்களில் சூரிய சக்தியை பயன்படுத்த

 வேண்டும், மழை நீர் சேகரிப்பு நிலையங்கள் இருக்க வேண்டும், மின் விளக்குகளின்

 பயன்பாட்டை குறைக்கும் வகையில் கட்டிடங்களின் வடிவமைப்பு இருக்க வேண்டும், 

முக்கியமாக இவையெல்லாம் காகிதங்களோடு நின்று கொள்ளாமல் முறையாக

 நடைமுறைப்படுத்த வேண்டும். செய்யுமா அரசாங்கம்???


நம் பங்கு??

சும்மா கோஷம் போடாமல், அறையிலிருந்து வரும்போது மின்விசிறியையும்,

விளக்கையும் அணைத்துவிட்டு வருவோமே!!! 



No comments:

Post a Comment